கரூர்: தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 75 ஆண்டு பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,  1947ல் தொடங்கப்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த பணிக்காக  ரூ.6 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள வளாகத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை வருடத்தில் பணிகள் முடிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், தற்போது தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. தொழிற்சாலைகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அறிவிக்கப்படவில்லை. 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி கொள்முதல் செய்ய ஆர்டர் போடப்பட்டது. 137 டாலருக்கு தனியாருக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே முன்கூட்டியே 137 டாலருக்கு தனியாருக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டது என்றவர்  தமிழ்நாடு மின்சார வாரியம் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் மின் உற்பத்தி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.