சென்னை: பேரறிவாளனை விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கண் மற்றும் வாயில் கருப்புதுணி கட்டி காந் திசிலை முன்பு அமர்ந்து அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு  அறப்போராட்டம் நடத்துமாறு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.

இதற்கிடையில், இன்று சேலத்தில், பேரறிவாளன் விடுதலை தீர்ப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியின தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காங்கிரஸ் கட்சி ஆர்டிஐ பிரிவு மாநில தலைவர் கனகராஜ் தலைமையில் சேலம் மல்லூர் பகுதியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து  அங்குள்ள காந்தி சிலை முன்பு கருப்பு துணியால் கண்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பேசிய  RTI மாநிலத் தலைவர் கனராஜ், பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது என்று கூறியவர்,  தற்பொழுது விடுதலையாகி உள்ள பேரறிவாளன் எந்த ஒரு கட்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது; பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கக் கூடாது என்றும் கூறினார்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பு  காங்கிரஸ் கட்சிக்கு தீர்ப்பு மிகப் பெரிய வேதனையாக அமைந்துள்ளது என்று கூறினார்.