சென்னை: இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்திய (தமிழக) மீனவர்களுக்கு சிறைதண்டனை ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்து உள்ளார்.
தமிழக மீனவர்கள் கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இலங்கை கடற்பகுதிகுள் வருவதாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழன மீனவர்களை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோல கடந்த மாதம் இறுதியில், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 55 பேரையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இதுதொடர்பாக இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைய நிலையில்,   சிறையில் அடைக்கப்பட்டிருந்த  தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய படகின் உரிமையாளர்கள் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பக்கத்தில் படம் மற்றும் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். அதில்,
இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை.
……………..
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 18 மற்றும் 20 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 55 இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கும் தலா ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைப்பற்றப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 8 படகுகளில் ஒரு படகும் அரசுடமையாக்கப் பட்டுள்ளதுடன் ஏனைய 7 படகுகளுக்குமான உரிமையாளர்கள் இன்று நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அவை தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக, இலங்கை கடற்பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைந்தமை, கடற்றொழில் உபகரணங்களை தொடக்கறுத்து வைத்திருந்தமை, சட்டவிரோத தொழில் முறையைப் பயன்படுத்தியமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 25.01.2022.
இவ்வாறு கூறியுள்ளார்.