தென்காசி: தென்காசியில் தபால் வாக்கை வாட்ஸ்அப்பில் ஷேர் செய்த ஆசிரியை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் வாக்கும் பெறும் பணி 26ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இதற்கான பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் காவல்துறையினர் மட்டும் தேர்தல் அலுவலர்களும் சென்று தபால் வாக்கினை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,  தென்காசியில் தபால் வாக்கு, விதிமுறைகளுக்கு மாறாக, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ஆசிரியை ஒருவர் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பழணி நாடார் புகார் அளித்தார். அதன்பேரில்,  தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.  அந்த ஆசிரியையை உடடினயாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த ஆசிரியை தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அடுத்த சுரண்டை அரசு நடுநிலை பள்ளியில்  பணியாற்றி வருகிறார். அவரது பெயர் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள்.

இது தொடர்பான விசாரணையை அடுத்து ஆசிரியை, உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வாக்குச்சீட்டு மாற்றிய கொடுத்ததாக,  கிருஷ்ணவேணிஎன்பவரது கணவரும் அமமுக பிரமுகருமான கணேச பாண்டியன், அமமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் மூவரையும் விடுவித்தனர்.

தபால் வாக்கு  வெளியான நபரின் கணவர், கட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகவும், அவர் அதை சமுக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என ஆசிரியை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.