சென்னை: பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்படும்  என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி,  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இம்மாதம் பொங்கலுக்கு முன்னதாக 10ம் தேதியே அவரவர் வங்கி கணக்கில் வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6000 உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன் காரணமாக, பொங்கல் பரிசாக, அரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்படும் என சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால், இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ₹1000 ரொக்கமும் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும். தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.