மதுரை:  பொங்கலையொட்டி பல மாவட்டங்களில் நடைபெற்று வந்த  மஞ்சுவிரட்டு போட்டியில் காயமடைந்த  மேலும் ஒருநபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல ஜல்லிக்கட்டு பலி எண்ணிக்கை 5ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள்  நடத்தப்பட்டது. அலங்காநல்லூர் , பாலமேடு ,அவனியாபுரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதுபோல பல இடங்களில் மஞ்சு விரட்டு போட்டிகளம் நடைபெற்றன.

இந்த நிலையில்,  கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் 417 காளைகள் பங்கேற்றது . அத்துடன் போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் உட்பட 27 பேர் காயமடைந்தனர். காளை முட்டியதில் பள்ளப்பட்டியை சேர்ந்த இளைஞர் சிவக்குமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது.மாடுபிடி வீரர் சிவக்குமார் சோர்வடைந்து தடுப்பு கம்பி வேலி ஓரமாக அமர்ந்து இருந்தபோது காளை குத்தியது.

கண் பார்வை இழந்த இளைஞர் சிவக்குமார்  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் சிவக்குமார் பரிதாபமாக பலியாகி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கிராமத்தில் பொங்கல் விழாவையொட்டி  நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை தொடங்கிவைத்தார். இதில் சீறிபாய்ந்து ஓடிய காளைகள் அங்கு திரண்டிருந்தவர்கள் பலரை முட்டிவிட்டு சென்றன. காளைகள் முட்டியதில் 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த 25 பேர் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் பார்வையாளராக வந்திருந்த மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 52) என்பவர், மாடு முட்டியதில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர், விவசாயி பெரியபுலியன் (வயது 80). மாட்டு பொங்கல் அன்று அதே பகுதியில் உள்ள வெள்ளி மலையாண்டி கோவில் அருகே நடந்து சென்றார். அந்த பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் கலந்துகொண்ட காளை ஒன்று, அந்த வழியாக ஓடிவந்தது. திடீரென அந்த காளை பெரியபுலியனை முட்டி தள்ளியது. படுகாயம் அடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.ராயவரம் நொண்டி ஐயா கோவில் திடலில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் காளை முட்டி சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) என்ற பார்வையாளர் உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ராமச்சந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராஜி (72) என்ற மூதாட்டி சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த மாடு மூதாட்டியை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நடந்த மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 4 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

அதுபோல ஜல்லிக்கட்டு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காயமடைந்த இளைஞர் சிவக்குமார் (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மொத்தம் 450 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை பாலமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி  யில், பல மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில், காளைகளை அடக்கும்போது எதிர்பாராதவிதமாக அரவிந்த் ராஜ் என்ற மாடுபிடி வீரர் காளை முட்டியதில் படுகாயமடைந்தார். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் திருச்சி சூரியூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக வந்த அரவிந்த் என்ற வாலிபர், காளைகள் மைதானத்தில் இருந்து வெளியே ஓடி வரும்போது காளை மார்பில் முடிட்டியதில் மரணமடைந்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டுபேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் 3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தனது ஆழ்நத இரங்கலை தெரிவித்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு இந்நிதியுதவியை அறிவித்துள்ளார்.