சென்னை: கிருஷ்ணகிரி ராணுவர் வீரர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நடைபெற்ற பாஜக போராட்டத்தில் குண்டு வைப்போம் என மிரட்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினரால், ராணுவ அதிகாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து,  பாஜக பட்டியலின அணி நிர்வாகி தடா பெரியசாமி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று திருவல்லிக்கேணியில் கண்டன ஆர்ப்பாட்டமும், மெழுகுவர்த்தி ஏந்திய பேரணியும் நடைபெற்றது.

பாஜக போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரிகள் பலர், தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்த நிலையில்,  முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன்,  ‘உலகத்திலேயே மிகப்பெரிய ஒழுக்கமானது இந்திய ராணுவம், அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல, நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள், அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது.

இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள்’ என  மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.

இதையடுத்து அவர்மீது சென்னை காவல்துறை, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்! கிருஷ்ணகிரி விவகாரம் தொடர்பான பாஜக போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் மிரட்டல்…

கிருஷ்ணகிரி ராணுவவீரர் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிதி! மெழுகுவர்த்தி பேரணியில் மாநில பாஜக அறிவிப்பு…