சென்னை:  கிருஷ்ணகிரி பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் திமுக கவுன்சிலரின் குடும்பத்தினரால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய  முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன் என்பவர்,  இதுபோன்ற நிலை தொடர்ந்தால், திமுகவுக்கு குண்டு வைப்போம் என பகிரங்கமாக பேசினார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘கிருஷ்கிரி மாவட்டம் போச்சம்பள்ளி  பகுதியில், குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்த ராணுவ வீருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பாக இன்று  சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

‘கிருஷ்கிரி மாவட்டம் போச்சம்பள்ளி  பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்களான பிரபு என்ற பிரபாகரன் குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்துள்ளார். இதை பார்த்த  கவுன்சிலர் சின்னசாமி இது பொது தண்ணீர்தொட்டி இதில் துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது

. இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராணுவ வீரர் பிரபாகரன் கவுன்சிலர் சின்னச்சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேரூராட்சி உறுப்பினர் சின்னசாமி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று ராணுவ வீரர்கள் பிரபு அவரது அண்ணன் மற்றோரு ராணுவவீரர் பிரபாகரன், தாயார் கண்ணம்மாள், தந்தை மாதையன், ஆகிய நான்கு பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் பலத்த காயமடைந்த ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திமுக கவுன்சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் குடும்ப சண்டை, அதுதொடர்பாக வதந்தி பரப்பக்கூடாது என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், பாஜக சார்பில், கிருஷ்ணகிரி சம்பவத்திற்கு  கண்டனத்தை தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள்விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  பாஜக பட்டியலினப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

எனவே திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் பிப்ரவரி 21-ம் தேதி (இன்று) சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். அதன்படி,  தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.‘  இதில் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், “இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பிரபுவை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்துள்ளார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். எனவே நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று இதை செய்து உள்ளார்.

திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம் என எச்சரித்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும், கர்ணல் பாண்டியன் மிரட்டல் விடுக்கும் வகையிலேயே பதில் கூறினார். அப்போது,  செய்தியாளர்களான நீங்கள் திமுகவின் கைக் கூலிகள் என்று விமர்சித்தார். இதனால் செய்தியாளர்களுக்கும், அவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாஜகவின் போராட்டம் முடிவடைந்தபிறகு, , தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. என்பதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திராவிட மாடல் இருளை போக்கும் விதமாக, இன்று மாலை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து, போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.