ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய தேர்தல் அலுவலர் சிவகுமார், வரும் 25ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அங்க அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி முக்கியமானது என்பதால், அமைச்சர்கள், எம்.பி.க்கள் களமிறக்கி அதகளம் செய்து வருகிறது.  அதேவேளையில் பரிசுப்பொருட்கள் விநியோகமும் அதிகரித்துள்ளது என பல வீடியோக்களும், போட்டோக்களும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்று  ஈரோட்டில் செய்தியாளர் சந்தித்த தேர்தல் அலுவலர் சிவகுமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொட்கள் கொடுத்ததாக 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார்களில், இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறை மீறல் பிரிவு 453இன் கீழ் 50 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.

மேலும், அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்ட நிலையில், 14 பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த தேர்தல் அலுவலர் ,பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும்,   வரும் 25ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது, இதற்கு அப்புறம் தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும் 25ஆம் தேதி மாலையுடன் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும்  குறிப்பிட்டார்.