சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி வரை கூகுள்பே உள்பட ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி தேர்தல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதே வேளையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே கட்சிமாச்சரியமின்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகமாகையால், கூகுள் பே போன்ற ஆன்லைன் செயலிகள் மூலமும் வாக்காளர்களுக்கு பண பரிமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன்  என்பவர்,  ஏப்ரல் 6ம் தேதி வரை கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தடை கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் பலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.