சென்னை:
மிழ்நாடு அரசு வழங்கும் 4000 ரூபாய் உதவித்தொகையை மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க தடை விதிக்க கோரிய வழக்கிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி, முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டு தற்போது இரண்டாம் தவணையும் அதனுடன் இணைந்து 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் ஏராளாமானவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, ஊதியப் பிடித்தம் அரங்கேறிய வண்ணம் உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் முழு சம்பளமும் வழங்கபப்ட்டு வருவது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகமாக இருப்பதாக பொதுவெளியில் பேசப்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட விமர்சனமும் கூடுதலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக எவ்வித சம்பள குறைப்பும் இன்றி சம்பளம் வழங்கப்படுகிறது.

எனவே, கொரானா நிவாரண நிதியான ரூ.4 ஆயிரத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆர்.சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், நிதியுதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.