சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ம் தேதி கூடுகிறது.

தமிழகத்தில் வரும் வரும் 21ஆம் தேதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 21ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த கூட்டமானது அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். முன்னதாக, தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து எம்எல்ஏக்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மட்டும் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவர் என்று சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அதே நாளில் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலய கலைஞர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், திமுக தனித்து 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.