சென்னை: சென்னை, திருவொற்றியூர் பகுதியில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சொத்துவரி உயர்வு, திமுக கவுன்சிலர்களின் அடாவடி குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், இன்னும் நான்கு ஆண்டுகள் மக்கள் சகித்துக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்றார்.

சென்னை திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி சார்பில்  அண்ணாமலை நகர் பகுதிகளில் வீடுகள் இடிக்கப்படும் பகுதியில் வசிக்கும்  பாதிக் கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக சீமான் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த பகுதி மக்களை சந்தித்து பேசினார். அப்போது கடுமையான வெயில் அடிக்கிறது அதில் போராடிக்கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்றவ சீமான். ஓட்டுரிமை, குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

சொத்து வரி உயர்வு குறித்த கேள்விக்கு பதில் தெரிவித்தவர், அதற்குத்தானே நீங்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறீர்கள் என்று கூறினார். எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது என்றார்.

பெண்கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் அடாவடி குறித்த கேள்விக்கு,  இதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று எதிர்கேள்வி எழுப்பியவர், இந்த கொடுமை நடக்கக் கூடாது என்றுதான் போராடியதாக கூறியவர், இனி ஒன்றும் செய்ய முடியாது, இந்த ஆட்சியில் இப்படித்தான் நடக்கும், இன்னும் நான்கு ஆண்டுகள் நீங்கள் சகித்துக்கொண்டுதான் இருந்தாக வேண்டும் என்றார்.

ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம் பற்றிய கேள்விக்கு,  இலாகா மாற்றி விட்டால் மட்டும் சரியாகி விடுமா? அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு வெயிலில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே,  திடீரென சீமான் மயங்கி விழுந்தார். அங்கிருந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் செய்தியாளர்களும் பதற்றமடைந்தனர். உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் சீமான் வீடு திரும்பினார். தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.