சென்னை

மிழகத்தில் மக்களவை தேர்தலின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் துணை ராணுவம் வர உள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு நடத்தி வருகிறது

இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்திலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கருத்துக்களைக் கேட்டார். தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளைத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சியினர் முன்வைத்தனர்.

இன்று செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,

”நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் துணை ராணுவம் தமிழகத்துக்கு வருகிறது. மார்ச் முதல் வாரம் 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனர். முந்தைய தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் புதன்கிழமையில் தேர்தல் நடத்துமாறும், வார இறுதி நாட்களிலோ, வார தொடக்க நாளிலோ வாக்குப்பதிவை நடத்த வேண்டாம் எனவும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் ஜூன் வரையிலான அரசு விடுமுறை நாட்கள், உள்ளூர் விழாக்கள், மதம் சார்ந்த பண்டிகைகள் குறித்த விவரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்திய பிறகு பண்டிகைகள், விடுமுறை நாட்கள் இல்லாத நாளை தேர்வு செய்து தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்..”

என்று கூறினார்.