சென்னை: அதிமுக அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமனம் செய்து அறிவித்த நிலையில், பண்ருட்டி ராமச்சந் திரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் நியமித்து அறிக்கை வெளியிட்டார்.  இதையடுத், அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.