தஞ்சாவூர்: பழனிசாமி விவசாயி அல்ல…  அவர் ஒரு விஷவாயு என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையாக தாக்கி பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்தார் என, முதல்வர் பேசி வருகிறார். காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தவர் கருணாநிதி. அந்த உரிமையை மத்திய அரசின் ஜல்சக்தி துறையிடம், அடகு வைத்த துரோகி தான் முதல்வர் பழனிசாமி .
காவிரி உரிமைக்காக போராடியவரை, துரோகம் செய்து விட்டார் என பேசும் முதல்வரின் நாக்கு அழுகிப் போய் விடும். ஒரு விவசாயி ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என பழனிசாமி கூறுகிறார். எனக்கு விவசாயி என்றால் பிடிக்கும். ஆனால் போலி விவசாயியை பிடிக்காது. பச்சை துண்டைப் போட்டுக் கொண்டு பச்சை துரோகியாக இருக்கக்கூடிய விவசாயியை பிடிக்காது.
பழனிசாமி உண்மையான விவசாயியாக இருந்தால், மூன்று வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், போராட்டம் நடத்தி வரும்,  விவசாயிகளை, இடைத்தரகர் என கொச்சைப்படுத்துகிறார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என சொல்லிவிட்டு, நீதிமன்றத்திலே எந்த விதிமுறையும் வகுக்கவில்லை என்று சொன்ன நீங்கள் ஒரு விவசாயியா? இல்லை, நீங்கள் விஷவாயு.
மக்கள் அனைவரும் தயவு செய்து, ‘மாஸ்க்’ அணியுங்கள். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன், தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.