டெல்லி: நாடு முழுவதும்  வாக்காளர் பட்டியலில்  சரிபார்ப்பைத் தொடர்ந்து, சுமார்  1.66 கோடி வாக்காளர்களின்  பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதி மன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தற்போதுள்ள  17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக் கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால், அகில இந்திய அரசியல்  கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன. அதுபோல, எந்தெந்த தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டு, வேட்பாளர்கள் தேர்வு பணிகளும் நடைபெற்று வதுகின்றன.

அதுபோல தேர்தல் ஆணையத்தின்மூலம் வாக்காளர் சேர்ப்பு, திருத்தம், மறைந்த வாக்காளர்களின் பெயர் நீக்கம் போன்றவை நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சம்விதான் பச்சாவோ டிரஸ்ட் என்ற அமைப்பு  சார்பில் உச்சநீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அவர்களது மனுவில், வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் உள்ள ஒரே நபர்களின் பெயர்களைக் கண்டுபிடித்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில்  நடைபெற்றது. அப்போது,  இந்திய த லைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேர்தல் ஆணையம்  வாக்காளர் பெயர் நீக்கம்,  சேர்ப்பு ஆகியவை குறித்த புள்ளி விவரங்களை அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம்கள் நடத்தப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் புதிதாக 2.68 கோடி பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

1.66 கோடி நபர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் சுமார் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

அசாம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தவிர்த்து வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது.b இந்த மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் அங்கு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட வில்லை’ என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்போது குறுக்கிட்டு,  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ”வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நபர்களில் இறந்தவர்கள் விவரம், நிரந்தரமாக வீடு அல்லது ஊர் மாறியவர்கள் விவரம், பெயர் நீக்கப்பட்ட நபர்களின் விவரங்களை தனித்தனியாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.