மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து வருகிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலயில்,  தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பாதிப்புகள் உண்டாகின.அதிக பட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரேநாளில் 44 செ.மீ அளவுக்கு மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிலையில், இன்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.  பெருமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் – சிதம்பரம் தொகுதி வல்லம்படுகை கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி, திரு. K.A.பாண்டியன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சீர்காழி அருகே நல்லூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  ஆய்வு செய்து வருகிறார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், விளைநிலங்களை பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து,  மயிலாடுதுறை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. பின்னர்  வேட்டங்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.  மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள், விளைநிலங்களை ஆய்வு செய்து வருகிறார். பயிர்களை மூழ்கடித்துள்ள மழைநீரில் இறங்கி விவசாயிகளுடன் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி  ஏற்கனவே சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களுக்கு மளிகை பொருட்கள், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.

முன்னதாக நேற்று, இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், கோகுல இந்திரா, பா.வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, சென்னையில் மழை வெள்ள பாதிப்பு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இன்று  காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற எடப்பாடி பழனிச்சாமி , கடலூர் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளிலும் நேரில் பார்வையிடுகிறார். மேலும் பொது மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, வடகிழக்கு பருவமழை ஆரம்ப கட்டத்திலேயே கனமழை பெய்து கடலூர் மாவட்டத்திலே பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக பொறுத்தவரை ஆளும் கட்சியாக இருந்த போதும்  மக்களுக்கு சேவை செய்தோம். எதிர்கட்சி யாக இருக்கும் போதும் மக்களுக்கு சேவை செய்கின்ற ஒரே இயக்கம் அதிமுகதான். ஏனென்றால் இந்த இயக்கம் தோற்றுவித்ததே ஏழைகளுக்காகதான். எம்ஜிஆர் ஏழை மக்கள் நலம் காக்கவும், துண்பம், வேதனைகளை போக்குவதற்காக அதிமுகவை தோற்றுவித்தார்கள். அடுத்த வந்த ஜெயலலிதா, எம்ஜிஆர் விட்டு சென்ற பணியை தொடர்ந்து செயல்படுத்தினார். நாட்டு மக்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடன் கலைந்து உதவிகளை செய்தார். அவர்களுடைய வழியில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஆகவே டெல்டா மாவட்டத்தை பொறுத்த வரை, கடலூர் மாவட்டம் எப்போதெல்லாம் பருவ மழை காலங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் இப்பகுதியில் கனமழை பெய்து வெள்ளத்தால் பாதிக்கப்படு வருகிறார்கள். வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்கு எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, நான் முதல்வராக இருந்த காலத்திலும் சரி, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து வடிகால் வசதிகளை செய்து மழை நீர், வெள்ளநீர் வடிகின்ற சூழலை உருவாக்கி தந்துள்ளோம்.கடலூர் மாவட்டத்தில் ம.ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.500 கோடியில் கதவணை கட்டி கொடுத்துள்ளோம்.

இந்த கதவணை மூலமாக மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு நிறைய திட்டங்களை தந்துள்ளோம். எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் வேதனைகளை மீட்டெடுக்கும் வகையில் உதவிகளை செய்துள்ளோம். கடந்த காலத்தில் வறட்சி ஏற்பட்ட போது வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளோம். விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர் கடன்களை ஜெயலலிதா தள்ளுபடி செய்தார். அதன் பிறகு கரோனா தொற்று காலத்தில் விவசாயிகள் வருமானம் குறைந்து அல்லல்பட்டிருந்த போது விவசாயிகளுக்கு மீண்டும் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆண்டுகளில் இரு முறை பயிர்கடன்களை தள்ளுபடி செய்த அரசு ஜெயலலிதா அரசு. ஏழை எளிய மக்கள், விவசாய தொழிலாளிகள் பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி வளர்க்கும் திட்டங்களை கொண்டு வந்தோம்.

அம்மா மினி கிளினிக் என்ற அற்புதமான திட்டத்தை கிராமப்புறங்களில் கொண்டு வந்தோம். 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் அத்தனையும் திமுக அரசு மூடிவிட்டு நகர்ப்புற மருத்துவமனைகளை தொடங்கியுள்ளது. ஏழை மக்கள் பயன்பெறும் திட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக அரசு மூடிக்கொண்டிருந்கின்றன.

அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள் ஒதுக்கீடு 7.5 சதவீதம் கொண்டு வந்தோம். இந்த ஆண்டு இந்த ஒதுக்கீட்டில் 565 பேருக்கு தேர்வு செய்யப்பட்ட, செலவில்லாமல் மருத்துவம் பயின்று வருகின்றனர். பொங்கல் தொகுப்பு நாங்கள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் மிக மோசமான பொருள்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வகையில் மடிக்கணினி கொடுத்தோம். இந்த அரசை அதையும் நிறுத்திவிட்டது. இன்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக கைவிட்டு வருகிறார்கள். திருமண உதவி திட்டம், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்தையும் கைவிட்டு விட்டார்கள்.

கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ. அருண்மொழிதேவன் எம்எல்ஏ, அதிமுக அமைப்பு செயலாளர் நாக.முருகுமாறன், முன்னாள் அமைச்சர்கள் க.கலைமணி, செல்வி ராமஜெயம், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.கே.மாரிமுத்து, கடலூர் மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.என்.குமார், டேங்க் சண்முகம், தில்லை கோபி, ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக சிதம்பரம் எல்லையில் எடப்பாடி கே.பழனிசாமியை, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலளர் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்