கொழும்பு

போதிய மருந்துகள் இல்லாததால் இலங்கையில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இலங்கை நிதி நெருக்கடியை சமாளிக்கச் சீனாவிடம் கடன் வாங்கி அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித் தவித்தது.

இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இலங்கை வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது.  மேலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது. இந்தியா ஏற்கனவே 10 ஆயிரம் கோடி ரூபாயை நிதி உதவியாக இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும்,   நேற்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக நேற்று இலங்கைக்குச் சென்றுள்ளார்.

இலங்கையில் உள்ள பிரடன்யா மருத்துவமனையில் போதிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவசர பிரிவுகளுக்கான அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுவதாகவும் இலங்கையைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதையொட்டி சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கும்படி இந்திய தூதரகத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.