சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில், திமுக அரசு எடுத்து வரும் தீவிர முயற்சியின் பலனாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை 80 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய தென் ஆப்பிரிக்கா வைரசான ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் கண்காணிப்புகள், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  தமிழகத்தில் தற்போது,  அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும்  நீட்டிப்பது குறித்தும், ஒமிக்ரான் தொற்று பரவல், அதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அமைச்சர், மற்றும் முக்கிய அமைச்சர்கள், காவல்துறை தலைவர்,தலைமைச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார்.