சென்னை: ஆளுநர் உரையுடன் அடுத்த தமிழ்நாடு சட்டப் பேரவைக்கூட்டத்தொடர் கோட்டையில் உள்ள பழைய சட்டப்பேரவையில் ஜனவரி 5ந்தேதி தொடங்குகிறது சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் நடை பெற்று வந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், பேரவை கூட்டத்தொடர் மீண்டும் ஜார்ஜ் கோட்டை தலைமைச்செயலகத்தில் உள்ள பேரவை கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, 2022-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன்  செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என  அறிவித்துள்ளார்.  அவையின் அனைத்து நடவடிக்கைகளும் காகிதம் இன்றி,  கணினி மூலமே இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் வகையிலான  ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியவர், விரைவில் அது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும்,  உங்களுக்கு (செய்தியாளர்களை)  தெரியாமல் நாங்கள் எதையுமே மறைத்து வைக்க மாட்டோம், செய்ய மாட்டோம் என்றும் கூறினார்.