சென்னை: 10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச்செயலகத்தை (கோட்டை) முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட இந்த அமைப்பினரை, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார். மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இவர்களின் கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.  ஆனால், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாத நிலையில், நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தவிருந்ததாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது 3 அமைச்சர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தையின் போது கூறப்பட்ட போது ஏதுவும் நடைமுறைப்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இறுதியாக  கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். கனமழை காரணமாக முற்றுகை போராட்டத்தை டிசம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில்,  இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்திற்கு அனுமதி இல்லாமல், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு தலைமைச் செயலகத்திற்கு அழைத்துs சென்றனர். அங்கு தலைமைச் செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர் கள் போராட்டக் களத்திற்கு வந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காவல்துறையினரின் தடுப்புகளை தள்ளிவிட்டு, ஆசிரியர்கள் சென்றனர். இதனைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுப்பட முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் , காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களை  காவல்துறையினர் கைது செய்து, பேருந்தில் ஏற்றிச்சென்று எழும்பூரில் உள்ள  ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ, ஜியோ அமைப்பின் நிர்வாகிகள்,   இன்று கோட்டை முற்றுகை போராட்டம்  வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசிற்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் போல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றித் தர வேண்டும். ஒரு வேளை கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் மாநில உயர்மட்டக் குழு கூட்டி அடுத்த கட்ட போராட்டத்தைத் தீவிரமாக நடத்தும்”என எச்சரித்தனர்.