சென்னை: டிசம்பர் 30 மற்றும் 31ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி  மக்கள் பாதுகாப்பாக இருக்க  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையால் பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக இந்த டிசம்பத்தில், அதிகனமழை, புயல் உருவாகி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. டிசம்பர் முதல்வாரத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் புரட்டப்போட்ட புயல் மழையைத் தொடர்ந்து, டிசம்பர் 3வது வாரத்தில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டடங்களில் அதிகனமழை கொட்டியதால், பேரழிவு ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர்  30, 31-ல் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும்  என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட  செய்திக்குறிப்பில்,  “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  28ந்தேதி முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவுமை, 30, 31ந்தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளத.

28.12.2023:  இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.12.2023:  நாளை, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.   குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.12.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

31.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.12.2023 மற்றும் 31.12.2023: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.01.2024 மற்றும் 02.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். மேலும்,  தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும்,   நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதுடன்,  தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.