சென்னை

தே மு தி க தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தே மு தி க தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவர் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,

“விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. பொதுச் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதை நிரப்புவது கடினம். விஜயகாந்த்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவுகூர்கிறேன்.” 

எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா,

“தே.மு.தி.க. தலைவரும், மதிப்பிற்குரிய மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். ‘கேப்டன்’ என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த், தனது திரை வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் மக்களிடையே தேசபக்தியைத் தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி சாந்தி.” 

என்று தெரிவித்துள்ளார்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ,

“சிறந்த நடிகரும், அர்ப்பணிப்பு மிக்க தலைவரும், சிறந்த மனித நேய வாதியுமான விஜயகாந்த்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. திரைத்துறை, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன.” 

என்று அறிவித்துள்ளார்.