சென்னை: நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தையொட்டி முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்து உள்ளார். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு தினம் கொண்டாடுவதில், திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு நிலவி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் இன்றைய தினத்தை  எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் தெரிவத்து டிவிட் பதிவிட்டள்ளார். அவரது டிவிட் பதிவில்,  ‘மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழகத்தோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள்! சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க!’ என பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு நாள் என்று தெரிவித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அவரது பதிவில்,   ‘தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் அறிஞர்கள், பல்வேறு தலைவர்கள் ஒருங்கிணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வென்ற,தமிழ் கூறும் நல்லுலகு என்னும் பெருமைமிகு நம் “தமிழ்நாடு” உருவான வரலாற்றையும், அதற்கு துணைநின்ற அனைத்து தியாக உள்ளங்களையும் போற்றி வணங்குகிறேன்.’ என் அப்பதிவிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டில்,  மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் நமக்கு தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். அது தான் தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்கள் அநீதிகளை எதிர்கொள்வதற்கும், தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோகவும் காரணமாகும். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியேற்போம். தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பு தமிழர்களின் மாநிலமாக 1.11.1956 அன்று நடைமுறைக்கு வந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு என்ற பெயரை அறிஞர் அண்ணா 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி தான் சூட்டினார். அந்த நாளையும் அதற்குரிய சிறப்புடன் கொண்டாட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி  வெளியிட்டுள்ள டிவிட்டில், நவம்பர் 1 இன்றைய தினம் தமிழ்நாடு நாள்.   இதுகுறித்து,  மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம் தேவை. அனைவருக்கும் உரிய சமூகநீதி, ஆற்று நீர் உரிமை, தரமான கல்வி,  தரமான மருத்துவம், இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் போக்க, தமிழ் நாட்டின் உரிமை உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி காண இந்நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் மேலும் தமிழ்நாடு தினம் குறித்து,

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே…
வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது முதல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் நவம்பர் 1ஐ அந்தந்த மாநில நாளாக கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாடப்படவில்லை. நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டுமென மருத்துவர் அய்யா அவர்களும் பா.ம.கவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதை சட்டமன்றத்தில் நானும் வலியுறுத்தி வாதாடினேன். ஆனால் கடந்த 2019 ஆண்டு நவம்பர் 1 முதல் தமிழ்நாடு நாள் கொண்டாட அறிவிக்கப்பட்டது. வரவேற்புக்குரியது. இன்று நவம்பர் 1 தமிழ் நாடு நாள் அனைவரும் கொண்டாடுவோம்.

மாநிலங்கள் மறு சீரமைப்பு சட்டத்தின்படி 1956 நவம்பர் 1 (முதல் தேதி) மொழி வாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு 14 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டுக்கு பேரிழப்புதான் ஏற்பட்டுள்ளது.

1956 நவம்பர் 1 ல் பிரிக்கப்பட்டபோது அன்றைய மதராஸ் மாகாணத் (தமிழ்நாடு) தில் இருந்த தமிழர்கள் வாழும் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங் கரை, நெடுங்காடு, பாலக்காடு ஆகிய பகுதிகள் கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மதறாஸ் மாகாணத்தி(தமிழ்நாடு)லிருந்த தமிழர்கள் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி போன்ற பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. அதேபோல் பெங்களூரு, கோலார் தங்க வயல், கொள்ளேகால் போன்ற பகுதிகள் மைசூர் மாகாணத்(கர்நாடகா)துடன் இணைக்கப்பட்டன.

இதனால் தமிழர்கள் வாழும் பகுதிகள் மதராஸ் மாகாணத்தி(தமிழ்நாடு)லிருந்து பிரித்து எடுத்தது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பாகும். கன்னியாகுமரிப் பகுதியும் திருத்தணி பகுதியும் மதராஸ் மாகாணத்தி(தமிழ்நாடு)லிருந்து பிரிக்கக் கூடாது என போராடியவர்கள் மார்சல் நேசமணி, ம.பொ.சிவஞானம், விநாயகம் ஆகியோர்.

நவம்பர் 1 இன்று தமிழ்நாடு தினம் அனைவரும் கொண்டாடுவோம். மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், தமிழ்நாட்டின் உரிமைகள், ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய உரிய சமூகநீதி, நாட்டின் சொத்தான அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மருத்துவ வசதி, ஆற்று நீர் உரிமை உள்ளிட்டவற்றை காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.