சென்னை: 11ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளிகளில்  நியமிக்கப்பட்ட 4000 ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்து  தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் ஆசிரியர்களாக, 4,000 பேர் டி.ஆர்,.பி., வழியே, 2010- – 11ம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, சான்றிதழ் உண்மைத்தன்மை ஆய்வு மற்றும் இரண்டு ஆண்டு பயிற்சிக்காலம் முடிந்ததும், பணி வரன்முறை உத்தரவு வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால், பல்வேறு நிர்வாக காரணங்களால், பணி வரன்முறை செய்யப்படவில்லை. அதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கான தேர்வு நிலை ஊதிய உயர்வை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 11 ஆண்டுகளாக பல்வேறு நீதிமன்ற வழக்கு தொடர்ந்தும் மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்து வந்த, 4,000 ஆசிரியர்களுக்கு, நேற்று பணி வரன்முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  2010 ஆக.,23க்கு முன் பணி நியமன விளம்பரம் வெளியாகி, அதில் நேரடி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வான ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற சட்ட விளக்கமும், இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது