சென்னை:  கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப் படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகளை மிரட்டி வருகிறது குரங்கம்மை எனப்படும் மங்கிஃபாக்ஸ். இந்தியாவில் கேரளாவில் மட்டுமே குரங்கம்மை பாதிப்பு சிலருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா எல்லை மாவட்டமான குமரி மாவட்டத்தில் சிலருக்க குரங்கம்மை பரவி இருப்பதாக தகவல்கள் பரவின.  குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல்  உடன் அவர்களில் கொப்புளங்கள் இருந்தால், அவர்கள் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் என நினைத்து, சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இநத்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கன்னியாகுமரில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என மறுப்பு தெரிவித்ததுடன்,  குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பான தகவலை முறையாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 97 சதவீத பேர் முதல் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றவர்,  வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெற வெறும் ரூ.30 ஆயிரம் கட்டினால் போதும்” என்றும் தெரிவித்தார்.