கோட்டயம்

கேரளாவின் மூத்த தம்பதியரைப் பற்றி “தி நியூஸ் மினிட்”  செய்தி வெளியிட்டுள்ளது.

தம்பதியர்கள் விவாகரத்து செய்துக் கொள்வது உலகெங்கும் அதிகரித்து வருகிறது.    அது இந்தியாவிலும் தற்போது சாதாரணம் ஆகி வருகிறது.   இந்நிலையில் கேரளாவை சேர்ந்த மாதவன் நாயர் – மீனாட்சி அம்மா தம்பதியினர் தற்போது தங்களின் 82 ஆவது திருமண நாளைக் கொண்டாடி வருகின்றனர்.     மாதவன் நாயரின் வயது 100 என்பதும் மீனாட்சி அம்மாவின் வயது 99 என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்காதோடுவில் இருவரும் வசித்து வருகின்றனர்.   மாதவன் நாயர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்.    இருவரும் ஆரம்பப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த போது முதல் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.   அப்போது அவர்களுக்கு 8 வயதுக்குள் இருந்ததால் இருவரும் திருமணம் செய்துக் கொள்வோம் என்பதை அறிந்திருக்கவில்லை.   ஒரே வகுப்பில் படித்த இருவரும் பிறகு வேறு வேறு பள்ளிக்கு மாறினார்கள்.

இவர்களுடையது காதல் திருமணம் அல்ல எனவும்  திருமணத்துக்கு பிறகு இருவரும் காதலிக்க ஆரம்பித்ததாகவும் மீனாட்சி அம்மா வெட்கத்துடன் தெரிவித்துள்ளார்.    இருவரும் தங்களின் ஐந்து குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர்.  மாதவன் நாயர், “இருவரும் ஒரே வகுப்பில் படித்த போதும் அப்போதெல்லாம் அதிகம் பேசிக் கொண்டது கூட கிடையாது.   குழந்தைப் பருவத்தில் இருந்ததால் அதிகம் பேச விஷயங்களும் இருந்தது கிடையாது.   எங்கள் குடும்பத்தினரால் எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது”  எனக் கூறுகிறார்.

இவர்கள் திருமணம் அந்தக் கால வழக்கப்படி எங்கள் திருமணம் பெண் வீட்டில் நடைபெற்றுள்ளது.   இப்போதைய தங்களது ஒரே பொழுது போக்கு வீட்டைச்  சுற்றி வாக்கிங் செய்வது என கூறும் மாதவன் நாயர் புகைப்படம் எடுத்துக் கொள்ள முதலில் தயங்கினார்.    ”எனக்கு ஒரு பல் கூட கிடையாது.   அப்படி இருக்க நான் புகைப்படத்தில் எப்படி நன்றாக தெரிவேன்?” என அவர் கேட்டதற்கு மீனாட்சி அம்மா தனது அத்தனைப் பற்களும் தெரிய சிரித்துள்ளார்.

News and Photo courtesy : THE NEWS MINUTE