சென்னை: தமிழகஅரசின் பரிந்துரைகளை ஏற்று, புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் செய்தால் மட்டுமே புதிய கல்விக் கொள்கையை ஏற்கப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார்.

திய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “மத்திய அரசிடமிருந்து கடந்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு இ-மெயில் வந்தது. அதில், இப்போதைய கொரோனா காலத்தில் மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதை எப்படிக் கையாளலாம், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தில் தற்போதைய நிலை, ஆன்லைன் கல்வியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ஆகியன குறித்து, மே 17-ல் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அந்தந்தத் துறை அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இது பள்ளி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால், மத்திய அரசு நடத்தும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும், அமைச்சரின் கருத்துகளைக் கேட்டு, அதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, பதில் இ-மெயில் அனுப்பினோம். ஆனால், அந்த இ-மெயிலுக்கு இதுவரை பதில் வரவில்லை. அதனால்,  மத்திய அரசின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மோடி அரசு அமல்படுத்த துடிக்கம் புதிய கல்விக் கொள்கை வரைவு மசோதா 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அதிலுள்ள சாதக, பாதகங்கள் குறித்து திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். மேலும், புதிய கல்விக்கொள்கையானது,  குலக் கல்வித் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திணிப்பதாக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில், அண்ணாவால் அறிவிக்கப்பட்டு, மு.கருணாநிதியால் பாதுகாக்கப்பட்ட இருமொழிக் கொள்கைக்கு வேட்டுவைக்கும் வகையில் மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதாகப் புதிய கல்விக் கொள்கை உள்ளது. அதுமட்டுமின்றி, அதில்  இட ஒதுக்கீடு குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை. 3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுத் தேர்வு முறை குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுக் கல்வி என்பது வளர்ந்த நாடுகளில்கூட இல்லை. ஆனால், மத்திய அரசோ மாநிலங்களில் யார் என்ன படிக்க வேண்டும் என்று நாங்கள்தான் முடிவு செய்வோம் என்ற அடிப்படையில், புதிய கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் என்றைக்கும் பின்வாங்காமல், மத்திய அரசுடன் மோதல் போக்கு என்ற வகையில் அல்லாமல், எங்கள் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பரிந்துரைகளை ஏற்று, புதிய கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.