ழநி

முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாகத் தங்கச் சங்கிலியைப் போட்ட கேரளப் பெண்ணுக்கு புதிய சங்கிலியை பழனி அறங்காவலர் தலைவர் வழங்கி உள்ளார்.

பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்குத் தினமும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.

கடந்த 2022 செப்.19-ம் தேதி கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் கிழக்கு பகவதி படி பகுதியைச் சேர்ந்த சசிதரன் பிள்ளை மகள் சங்கீதா என்பவர் சுவாமி தரிசனம் செய்யப் பழநிக்கு வந்துள்ளார்.

சங்கீதா கோயில் உண்டியலில் துளசி மாலையைச் செலுத்த முயன்றபோது, தவறுதலாக ஒன்றே முக்கால் பவுன் தங்க சங்கிலி உண்டியலில் விழுந்துள்ளது.  இதையொட்டி, ‘எங்கள் குடும்பத்தின் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு உண்டியலில் விழுந்த தங்க சங்கிலியைத் திரும்ப வழங்கு வேண்டும்’ என்று கோயில் அலுவலகத்தில் சங்கீதா கடிதம் கொடுத்துள்ளார்.

கோயில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது மேற்கண்ட சம்பவம் நடந்தது உறுதியானது.  சட்டப்படி உண்டியலில் விழுந்த பொருட்களைத் திரும்ப வழங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லை.

எனவே கோயில் அறங்காவலர் தலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 17.460 கிராம் தங்க சங்கிலியை சங்கீதாவுக்கு வழங்க முடிவு செய்தார்.

அதன்படி, அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன், கோயில் அலுவலர்கள் முன்னிலையில் சங்கீதாவுக்குத் தங்க சங்கிலியை வழங்கினார். சங்கிலியைப் பெற்றுக் கொண்ட சங்கீதா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.