டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல தலைவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதையகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 16வது குடியரச தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்துவேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் பதவிக்கு பொதுவேட்பாளராக  முன்னாள் மத்திய அமைச்சரும், மம்தா கட்சியின் துணைத்தலை வருமான யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடியினத்தைச் சேர்ந்த,  ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு (64) அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து முர்மு நாளை (ஜூன் 24) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, முர்மு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசுத்தலைவர் வெங்கையாநாயுடுவை சந்தித்து பேசினார்.

நாளை திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவருடன்  பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் என கூறப்படுகிறது. அப்போது பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என்றும் மற்றவர்கள் வழிமொழிவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பதிவிட்டுள்ள டிவிட்டில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒடிசாவின் மகள் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். அவருக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக வாக்களிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், “இதுகுறித்து பிரதமர் மோடி என்னுடன் ஆலோசித்தபோது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒடிசா மாநில மக்களுக்கு மிகவும் பெருமை மிகு தருணம் ஆகும்” என கூறியிருந்தார்.