சென்னை,

நான் உடல்நலமில்லாமல்  அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது,  எனக்கு ஜெயலலிதா கசாயம் செய்து கொடுத்தனுப்பினார். அதன் காரணமாக எனது காய்ச்சல் சரியானது என்று  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் காயச்சல் காரணமாக தான் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அதை கேள்விப்பட்ட ஜெயலலிதா, அதுகுறித்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, எனக்கு காய்ச்சலை போக்கும் வகையில் கசாயம் கொடுத்து அனுப்பினார். அதை  சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.  நான் நம்ப முடியாமல், அதை எடுத்து வந்தவர்களிடம் மீண்டும் கேட்டேன்….  அப்போது அவர்கள்,  ஜெயலலிதாவே அவர் கைப்பட போட்டுக் கொடுத்த கசாயம். இதை நீங்கள் குடிக்க வேண்டும் என்றனர்.

அதன்படி, அப்பல்லோ  மருத்துவரின் மருந்தை சாப்பிடாமல், அதற்கு  பதிலாக ஜெயலலிதா கொடுத்த கசாயத்தையே குடித்தேன். காய்ச்சல் சரியாகிவிட்டது. உடனே வீடு திரும்பிவிட்டேன் என்று உருக்கமாக கூறினார்.

மேலும், விருதுநகரில் நேற்று பட்டாசு ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்,   செய்தியாளர்களை சந்தித்தபோது,  புதிய கட்சி தொடங்கும் ரஜினிக்கும் கமலுக்கும் காலமும் வயதும் கடந்து விட்டது. எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவுக்கு சேதாரம் இல்லை. யாராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. புதிய கட்சிகளெல்லாம் புதிய படங்கள் போன்று ஓரிரு மாதங்கள் இருக்கும் பின்னர் காணாமல் போய்விடும் என்றார்.