சென்னை: பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை மார்ச் 7ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொகிறார்கள். இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, ரெயில்வே நிர்வாகத்துடன் நடை பெற்ற ஆலோசனைப்படி சென்னை கடற்கரை செங்கல்பட்டு வழித்தடத்தில் “ஷட்டில் மின்சார சேவைகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் சேவைகள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, சென்னை பரங்கிமலை – சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில் இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. நாளை (மார்ச் 5-ந்தேதி) ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தடத்தில் இறுதி சோதனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து, வருகிற 7-ந்தேதி முதல் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
மேலும், எழும்பூர் ரெயில் நிலையத்தின் 10-வது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்குள் ரெயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.