கோவை: மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள்  மனித குலத்திற்கு பயனளிக்கிறது என ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அறிமுக விழாவில் தமிழ்நாடு  டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

மருத்துவ துறையில் குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நவீன ரோபோட்டிக் சிகிச்சை முறை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து வருகிறது.  அந்த வகையில் மூட்டு மாற்று சிகிச்சை முறையில் ரோபோட்டிக் சிஸ்டத்தை கோவை ரெக்ஸ் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அறிமுக விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு புதிய மூட்டு மாற்று ரோபோட்டிக் சிஸ்டத்தை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது மனிதர்கள் மகிழ்ச்சியாக நோயற்ற ஆரோக்கிய வாழ்வு அவசியம் எனவும்அதற்கு மருத்துவர்களே மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டார். மருத்துவ துறையில் நவீன மாற்றங்கள் வருவது மனித குலத்திற்கு பயனளிக்க கூடியதாக இருப்பதாகவும், தற்போது நவீன மருத்துவ உபகரணங்கள் மனிதனின் உடல் செயல்பாடுகளை பரிசோதனை செய்ய மருத்துவர்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து கூறிய மருத்துவர் ரெக்ஸ், தமிழகத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்துள்ள இந்த ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் துல்லியமாக சிகிச்சை செய்வதோடு நோயாளிகள் விரைவில் குணமடையவும் முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளர்களாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள் சங்க தலைவர் மருத்துவர் சிங்காரவேலு, செயலாளர் மருத்துவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.