சென்னை: தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் தனிபிரிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றது. அதையடுத்து, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வரும், முதல்வர், அதற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவுக்கு வரும் கோரிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி, இன்று  தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மனு அளிக்க வந்த பொது மக்கள், ஊழியர்களிடம் முதல்வர் குறைகளை கேட்டறிந்தார். மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது எந்த அளவுக்கு தீர்வு காணப்படுகிறது என்றும் கேட்டறிந்தார். மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண அலுவலர்களை அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திடீர் ஆய்வு அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.