சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில், ஆங்கிலத்துக்கு மாற்றாக  இந்தியைத்தான் கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல என்றும்,  இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அமித்ஷாவின் பேச்சு குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.அதில்,

‘ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்.

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.

‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா?

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது!

ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது!

ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!’

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.