சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த நிலையில், இந்த திட்டதால், 90 ஆயிரம் கிராமங்கள் பயன் பெற்றுள்ளதாகவும்,   பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முதலாக மினி பஸ் திட்டத்தை கொண்டுவந்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையினா அதிமுக ஆட்சி காலத்தில்.   சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில், பேருந்து வசதி கிடைக்காத கிராம பகுதிமக்களின் வசதிக்காக மினி பஸ் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். இதுதொடர்பாக 2013ஆண்டு தமிழ்நாடு அரசின்  பட்ஜெட்டில்,  அறிவிக்கப்பட்டு,   2013ம் ஆண்டு அக்டோபர் 22ந்தேதி அன்று சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில், முதல் கட்டமாக சென்னையில்,  50 மினி பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மினி பஸ் சேவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.  இந்த திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் முதியோர்கள், ஏழையோர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பேருந்துகளுக்காக நெடுஞ்சாலைகளுக்கு நடந்து  வரும் நேரமும் மிச்சமானது. இதனால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், அடுத்து வந்த எடப்பாடி ஆட்சி நிதிநிலை காரணம் காட்டி, இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தால் கைவிடப்பட்டது.  இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் மினி பஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜுன் மாதம் 17ந்தேதி மீண்டும் மினி பஸ் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில்  இதுவரை பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கான மின் பஸ் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டி உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனியார் பேருந்துகளை அரசுடைமை யாக்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்கள். இந்தியாவில் பேருந்து வசதிகளில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் பெருமை அதன் மூலம் ஏற்பட்டது.

பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்கத்தக்க வகையில் மினி பஸ் திட்டம் 1997ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

மினி பஸ் திட்டம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 22.7.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் தொழில் சார்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில் புதிய விரிவான மினி பஸ் திட்டம் 2024 குறித்து 23.1.2025 அன்று அறிவிக்கப்பட்டது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் மறுபடியும் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, 28.4.2025 அன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, 25 கி.மீ. தூரத்திற்கு மினி பஸ் இயக்கப்படும் என்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொதுமக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டது. இதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தினை 16.6.2025 அன்று தஞ்சாவூரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். இதுவரை, பேருந்துகளை தங்கள் கிராமத்தில் காணாத பொதுமக்கள் எல்லாம் கண்டு மகிழ்ந்து பரவசம் அடையும் வகையில் மினி பேருந்துகள் கிராமப்புறங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்த மினி பஸ் தங்களுடைய கிராமத்திற்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் தரையில் விழுந்து தலைவணங்கி பேருந்தை வரவேற்றார். வேறு சிலர் பேருந்து வந்த வழித்தடத்தில் கற்பூரம் ஏற்றி மகிழ்ந்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

திருத்தணியிலிருந்து தும்பிக்குளத்திற்குப் புதிதாக இயக்கப்பட்ட மினி பஸ்ஸில் பயணம் செய்த ஒரு பெண், “நான் தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாயக் கூலி தொழிலாளியான நான், நாள்தோறும் வேலைக்குச் செல்லும்போது பஸ் வசதி இல்லாததால், நடந்தே வேலைக்குச் சென்று அவதிப்பட்டு வந்தேன். தற்போது மினி பஸ் சேவை தொடங்கியிருப்பதால், இதில், பாதுகாப்பாக வேலைக்குச் சென்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் கிராமத்திற்கு மினி பஸ் திட்டத்தைச் செயல்படுத்திய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பவானி என்னும் மாணவி தெரிவிக்கையில் “திருத்தணியில் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கிறேன். நான் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால், நாள்தோறும் பள்ளிக்குச் செல்வதற்குச் சிரமம் ஏற்பட்டது. தற்போது எங்கள் ஊருக்கு மினி பஸ் வருவதால், நான் பள்ளி செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லிக்குப்பம் வரை செல்லும் மினி பஸ்ஸில் பயணம் செய்த கன்னிவாக்கத்தைச் சேர்ந்த வரதராஜன், “எங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதி கிடையாது. நாங்கள் இரு சக்கர வாகனங்களிலோ, ஆட்டோ பிடித்தோ அதிக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இதுவரை இருந்தோம். தற்போது எங்கள் கிராமத்திற்கு மினி பஸ் வருவதால், எங்கள் சிரமம் குறைந்து, செலவினம் குறைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இத்திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ள முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்துள்ள இந்த மினி பஸ் திட்டத்தால், இவர்களைப் போல ஏறத்தாழ 1 கோடி முறை மினி பஸ்ஸில் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பேருந்துகள் இயக்கப்படாதபகுதிகளுக்கு புதிதாக மினி பஸ் சேவை! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்