சென்னை: 2024-25ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் மாநகராட்சி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.  சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில்  இன்று  பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதுலு  மேயர் பிரியா பட்ஜெட்  உரையை வாசிப்பார்.

தமிழ்நாடு அரசு போல, மாநகராட்சியிலும் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக  ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி  9-ம் தேதி  மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது இந்த பட்ஜெட் தயாரிப்பதற்கு துறை சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

இதைத்தொடர்ந்து,   இன்று சென்னை மாநகராட்சியின் மாமன்றத்தில்  2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட உள்ளார். இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாளை (பிப்ரவரி 22-ஆம்) தேதி நடைபெறும்.

கடந்த ஆண்டு பட்ஜெட் போலவே இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட் சென்னை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்ற பிரியா கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தாா். இதையடுத்து, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.340 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 82 அறிவிப்புகளை வெளியிடப்பட்டது. அதில் கல்விதுறைக்கு 27 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.