சென்னை:   சண்டிகர் மாநில  மேயர் தேர்தல் முறைகேட்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் கலங்கரை விளக்கம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சண்டிகர் மாநிலத்தில் சமீபத்தில் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், இண்டி கூட்டணி சார்பில், காங்கிரஸ், ஆம்ஆத்மி இணைந்து களமிறங்கின.   கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி சார்பில் குல்தீப் குமார் என்பவரும், பா.ஜ.க சார்பில் மனோஜ் சோன்கர் என்பவரும் போட்டியிட்டனர். கடந்த ஜனவரி 30-ம் தேதி சண்டிகர் மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் 36 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும், பா.ஜ.க-வுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த 8 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அனில் மசி அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தேர்தல் அதிகாரி அனில் மசி பாஜகவுக்கு ஆதரவாக,  உறுப்பினர்களின் வாக்குச் சீட்டுகளை பேனாவால் கோடு போட்டு அடிக்கும் வீடியோ  வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சண்டிகர் மேயர் தேர்தலில், தேர்தல் அதிகாரியின் முறைகேட்டை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட அனில் மசியை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது. மேலும் அவர் வேண்டுமென்றே பா.ஜ.க வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார் என்றும் குறிப்பிட்டது.

அதுமட்டுமின்றி,  பா.ஜ.க வெற்றி செல்லாது என்று அறிவித்த நீதிமன்றம்,  ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.  தொடர்ந்து தேர்தல் அதிகாரி அனில் மசியை குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும்உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து  தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  “சண்டிகர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. நாடறிந்து நடந்த தேர்தல் முறைகேட்டை விசாரித்து தேர்தலை ரத்து செய்தது மட்டுமின்றி தேர்தல் அதிகாரியின் முறைகேட்டையும் தீர்க்கமாக ஒதுக்கி தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பா.ஜ.க-வின் தொடரும் சூழ்ச்சி மற்றும் தந்திரமான நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த இறுதி எச்சரிக்கை, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.