திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை 12 ஆம் தேதி மாலை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து ஒருசில நாட்கள், பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதி வழங்கப்படும்.  அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கேரள தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப் படுகிறது.  தொடர்ந்து மறுநாள் முதல் 17 ஆம் தேதி வரை 5 நாள்கள் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலை 2022-2023-ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த ஜனவரி மாதம்  மாதம் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் ரூ.380 கோடி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்ததாக தேவசம் போர்டு அறிவித்தது. இதையடுத்து, காணிக்கை பணங்கள் எண்ணும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில்,  தேவஸ்தானம் சார்பில் 540 ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியை தொடங்கி உள்ளனர். ரூ.18 கோடி அளவிற்கு காணிக்கை பணம் குவிக்கப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக நடை 12ந்தேதி திறப்பதற்கு முன்னதாக (பிப்.11) காணிக்கைகளை எண்ணி முடிக்க திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.