மதுரை

நேற்று மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன், பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

குமாருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இவர் பொறுப்பேற்ற பின்னர் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை மறுநிர்ணயம் செய்தல் போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததாக கூறப்பட்டது.

இதைத்தவிர நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதிலும் சிக்கல்கள் எழுந்தன. எனவே ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் துணைவேந்தர் குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று குமார், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆள்நர் ஆர்.என்.ரவியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இன்னும் 11 மாத பணிக்காலம் உள்ள சூழலில், அவரது இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாருடைய ராஜினாமா கடிதத்தின் மீதான பதிலை கவர்னர் ஆர்.என்.ரவி ஓரிரு நாளில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.