சென்னை:   மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு  வரும் பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 27 மாநிங்களில் வரும் 19ந் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தருகிறார். இந்த ஆண்டு (2024) தொடங்கியது முதல் ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளாக 6 முறை தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, நாளை 7வது முறையாக தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வருகிறார். அவரது வருகை தொடர்பாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், அந்த பயணத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு திருத்தப்பட்ட அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஏப்ரல் 9ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

நாளை (9ந்தேதி) உத்தரபிரதேசம் மாநிலம் பிலிபிட் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு, நாளை பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காடு சென்றடைகிறார் அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு மாலை 6.30 மணிக்கு வருகிறார். விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.டி., சாலை வழியாக பனகல் பார்க் செல்கிறார்.

பின்னர் அங்கு தொண்டர்களின் வரவேற்பை ஏற்கும் மோடி தொடர்ந்து ரோட் ஷோவில் பங்கேற்று, பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னையில் போட்டியிடும் பால்கனகராஜ் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் வினோஜ் செல்வம் ஆகியோருகாக வாக்கு சேகரிக்கிறார்.

ரோட் ஷோவுடன் நாளைய பயண திட்டம் முடிய, இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒய்வெடுக்கிறார். புதன்கிழமை காலை சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார். வேலுர் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

பின்னர், அங்கிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடைகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரான எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார். இறுதியாக கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிராவிற்கு புறப்படுகிறார். அத்துடன் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ செல்ல இருக்கும் நிலையில், அவரது பயணம் நடைபெறும்  அனைத்து பகுதிகளும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர் விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள கடை ஊழியர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தியாகராய நகர் மற்றும் ஆளுநர் மாளிகையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்