சென்னை: சென்னையில் இன்று முதல் முதியோர்களுக்கான தபால்  ஓட்டு போடும் பணி தொடங்கி உள்ளது. தேர்தல் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில்,   ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு  நடைபெற்று ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பிற மாவட்டங்களில் ஏப்ரல் 1ந்தேதி முதல் தமிழ்நாட்டு தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்ற முதல் சென்னையில்   தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இந்த மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 11, 369 பேரும், 85 வயதுக்குட்பட்ட வாக்காளர்களாக 63,751 பேரும் உள்ளனர். மொத்தமாக 75, 120 பேர் இருக்கும் நிலையில் இவர்களில் 4,538 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தபால் வாக்களிக்கும் வகையிலான 12 டி படிவத்தை வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கினர். பின்னர் நிரப்பப்பட்ட படிவங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் தபால்வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ள  4, 538 பேரிடமும் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது  தொடங்கி உள்ளது. இந்த பணியானது வரும்   13ஆம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் சாகு அறிவித்து உள்ளார்.

தபால் வாக்கு சேகரிக்கும் பணியில்,  67 குழுக்கள் ஈடுபடுவதாகவும்,  ஒரு குழுவுக்கு 4 பேர் இடம் வீதம்  பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணியானது காலை 10.30 மணி முதல் வீடு வீடாக சென்று  தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது மேற்கொள்ளப்படுகிறது.

தபால் வாக்கு சீட்டினை அதிகாரிகள் வழங்கி, எப்படி வாக்களிப்பது என எடுத்துக்கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை திரும்ப பெறப்படுகிறது.