ஆந்திராவில் ஒரு ‘’சாத்தான்குளம்’’. போலீஸ் காவலில் மொட்டை அடித்து இளைஞர் சித்ரவதை..

மாதிரி புகைப்படம்

’சாத்தான்குளம்’ சம்பவம் போன்று ஆந்திர மாநிலத்திலும் போலீஸ் நிலையத்தில் ஒரு சித்ரவதை நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள கோதாவரி மாவட்டம் வெகுளபள்ளி கிராமத்தில் சில மணல் லாரிகள் வரிசையாக வந்துள்ளன.

அப்போது சவ ஊர்வலம் ஒன்று அந்த வழியாகப்  புறப்படத் தயாராக இருந்தது.

’’சவ ஊர்வலம் செல்லும் வரை லாரிகளை நிறுத்தி வையுங்கள்’’ என்று தலித் இளைஞர் பிரசாத் என்பவர் கூறியுள்ளார்.

லாரிகளும் நிறுத்தப்பட்டன.

செய்தி அறிந்து அந்த ஊர் ஆளும் கட்சி பிரமுகர் ( ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ) சம்பவ இடத்துக்கு வந்து லாரியை விடச்செய்துள்ளார்.

மறுநாள் அந்த கிராமத்துக்கு சீதாநகரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் பெரோஸ் என்பவரும், சில போலீஸ்காரர்களும் வந்து தலித் இளைஞர் பிரசாத்தையும், மேலும் இரண்டு இளைஞர்களையும் காவல்நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

பிரசாத்தை ’’பெல்டால்’’ விளாசித்தள்ளிய சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் பெரோஸ், ஆவேசம் தணியாதவராய் சவரத்தொழிலாளி ஒருவரைக் காவல்நிலையத்துக்கு வரவழைத்துள்ளார்.

தலித் இளைஞர் பிரசாத்தை மொட்டை அடிக்கச் செய்து, அவரது மீசையையும் சுத்தமாக மழிக்கச் செய்தார்.

காவல்நிலையத்தில் தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை ஆந்திராவை உலுக்கியுள்ள நிலையில், ‘’ ஒய்.எஸ்.ஆர். ஆட்சியில் காட்டு ராஜ்ஜியம் மீண்டும் தலை தூக்கி விட்டது’’ என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ட்விட் செய்துள்ளார்.

-பா.பாரதி.