பாட்னா: நிலத்திற்கு பதிலாக அரசு பணி வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட 14பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 15ந்தேதி ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பீகாரைச்சேர்ந்த  ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே இவர் பீகார் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார். அவர்மீது, மாட்டுத்தீவன ஊழல் உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று, தற்போது ஜாமினில் உள்ளார்.

இந்த நிலையில், லாலு  ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோருது,  இந்திய ரயில்வேயில் முறைகேடாக ஆட்சேர்ப்பு மற்றும் நிலத்திற்குப் பதிலாக வேலை வழங்குவதாக சொல்லி மோசடி என பல குற்றங்களை அவர் செய்ததாக கூறி லாலு பிரசாத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி, மத்திய ரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் சௌமியா ராகவன், ரயில்வேயின் முன்னாள் சிபிஓ கமல் தீப் மைன்ராய் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக நியமிக்கப்பட்ட 7 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதுதவிர, இவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறையும் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், இரண்டு வழக்குகளிலும் தங்களுக்கு ஜாமீன் வேண்டும் என லாலு பிரசாத், ராப்ரி தேவி உள்ளிட்டோர் நீதிமன்றம் நாடியதால், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த சூழலில்  லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பார்தி உள்ளிட்ட 14 பேருக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பி வரும் மார்ச் 15-ம் தேதி. தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழல் தொடர்பாக பல வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும் நிலையில், தற்போது நில மோசடி வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.