
சென்னை:
இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனகேரன், ஜான்ஜேக்கப், ராஜாங்கம், கந்தசாமி, ஆண்டிவேல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் சபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு 2 நிமிட மவுன மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கியது.
குரங்கணி காட்டுத்தீ மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அதற்கு பதில் அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. குரங்கணி வனப்பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களில் 27 பேர் மீட்கப்பட்டனர். இதில், 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த பகுதிக்கு அனுமதி பெறாமல் மலையேற்றம் சென்றதால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தீ விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் உடனடியாக மீட்பு நடவடிக்கை துவங்கப்பட்டது.
இந்த தகவல் கிடைக்கப்பெற்றதும் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் வனத்துறை அமைச்சர் உடடினயாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்களின் மேற்பார்வையில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று பலர் மீட்கப்பட்டனர் என்றும் கூறினார்.