கேரளா: என்ஐஏ சோதனையை கண்டித்து, கேரள மாநிலத்தில் இன்று பாப்புலர் பிரென்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு அனுமதி அளித்த கேரள மாநில அரசுக்கும்,  பாப்புலர் பிரென்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும் கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு சில இடங்களில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. பிஎஃப்ஐ அறிவித்த பந்த்தை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீதுஅந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்  தாக்குதல் நடத்தினர்.மேலும்,  கேரள அரசுப்பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் சுமோட்டோ வழக்காக பதிவு செய்து இன்று விசாரணை நடத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசையும், PFI அமைப்பையும் கடுமையாக சாடியதுடன், ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு பந்த், ஹர்த்தால் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.