சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக, அந்த இசை  நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவருக்கு டிக்கெட் பணத்துடன் அபராத மும் சேர்த்து  ரூ.67,000 அபராதம் வழங்க வேண்டும் என இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான். சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் ‘மறக்குமா நெஞ்சம்’ கான்சர்ட் நிகழ்ச்சி கடந்த 2023ம்  ஆண்டு அக்டோபர் 12ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் மழை உள்ளிட்ட காரணங்களால் அந்த நிகழ்ச்சி நவம்பர் 8 ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. மேலும்,  நவம்பர் 8ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. விற்கபட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் போடப்படவில்லை, இதனால் பலரும் இருக்கைகள் கிடைக்கவில்லை. எனவே ஏராளமானவர்கள் நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பினர். மேலும் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட எண்ணற்ற ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர், இதனால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். இதுதொடர்பான வழக்குகளும் தொடரப்பட்டது. கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில்,  “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியை பார்க்க  கரூரை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் ரூ.12 ஆயிரத்துக்கு  டிக்கெட் எடுத்துக்கொண்டு, குடும்பத்து டன்  வந்திருந்தார்.  . ஆனால் அக்டோபர் 12ம் தேதி நடக்க வேண்டிய நிகழ்ச்சி மாற்றப்பட்டதால், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தை தொடர்பு கொண்ட அஸ்வின், நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளதால் இனி என்னால் பங்கேற்க முடியாது எனவும், டிக்கெட் கட்டணத்தை திரும்ப தரும்படி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமும் அஸ்வினிடம் டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிப்பதாக கூறியது. ஆனால் கடைசி வரை கட்டணம் திருப்பி வழங்கப்பவில்லை.

இதையடுத்து அஸ்வின் மணிகண்டன் சார்பில் கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,அஸ்வின் மணிகண்டனுக்கு டிக்கெட் தொகை ரூ.12 ஆயிரம், இழப்பீடு ரூ.50 ஆயிரம், செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.67 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என ஏசிடிசி நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.