மிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதா, அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை  நடத்தியதில் கர்நாடக அரசுக்கு 10 கோடி ரூபாய் செலவு ஆகியிருப்பதாகவும், அத்தொகையை தரவேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரியிருக்கிறது.

இந்த வழக்கு முதலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  மீண்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வரான நிலையில், தமிழகத்தில் வழக்கு நடப்பதில் சிக்கல் ஏற்படும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும் படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி  வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக பலவித சட்டபிரச்சினைகளை சந்தித்தது இந்த வழக்கு. பிறகு  கடந்த 2014ம் ஆண்டு செப்.27ம், நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்டோர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார்.  இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதின்றத்தில்  மேல்முறையீடு செய்த ஜெயலலிதா, பின்னர் விடுவிக்கப்பட்டார் .

இதனைதொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது கர்நாடக அரசு.

இதன் தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா மரமணடைந்துவிட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை அவரது சொத்துக்களில் இருந்து பெறவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியதில் தனக்கு  ரூ.10 கோடி செலவாகியிருக்கிறது என்றும், அந்த்த தொகையை தர  வேண்டும் என்று கர்நாடக அரசு தமிழக அரசிடம், கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக, பேசிய கர்நாடகா சட்ட மற்றும் பாராளுமன்ற நலத்துறை அமைச்சர் ஜெயசந்திரா, கடந்த “சொத்துக்குவிப்பு வழக்கு உள்பட 4 வழக்குகளுக்கு ஈட்டு தொகை கொடுக்குமாறு 2015ம் ஆண்டே  தமிழக தலைமை செயலாளருக்கு  எழுதினோம்,  ஆனால்,  பதில் வரவில்லை” என்றார்.

மேலும், தன்னுடைய சட்டத் துறை மட்டும் இந்த வழக்குக்கு கிட்டதட்ட ரூ.5 கோடிக்கு மேலாக மட்டும் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

“தமிழகத்தில் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றிருக்கும் நிலையில் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளோம். அவராவது  உடனடியாக இந்தத் தொகையை கர்நாடக அரசுக்கு அளிக்க வேண்டும்” என்று கர்நாடக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.