கமல் என்கிற கடல்.. கையளவு குறிப்பு…

ஏழுமலை வெங்கடேசன்

பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து பெற்றோர் சொற்படி 2 சகோதரரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள் என்றால், கமல் சென்ற பாதையோ நடனம், நடிப்பு, கதை என முற்றிலும் நேர்மாறானது.

பள்ளிப்படிப்பைக்கூட முழுதாக முடிக்கமுடியாத அந்த கமல்தான் பின்னாளில்  சென்னை அமெரிக்க துணை தூதரகத்திற்கு பேட்டி அளித்தபோது வித்தியாசமான பரிணாமத்தை காட்டினார்.

பேட்டி எடுத்தவர், அந்தக்காலத்து ஹாலிவுட் ஜாம்பவான்களான மார்லன் பிராண்டோ மற்றும் ஜான் வெயின் ஆகியோரின் புகழ்பெற்ற வசனங்களை பேசச்சொன்னபோது, அதே மாடூலேஷனில் அப்படியே பேசிக்காட்டி அசத்தினார்.

அந்த அளவிற்கு அவருக்குள் திரை ஆர்வம் ரத்தத்தோடு ஊறிவிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. இவ்வளவிற்கும் காரணம், கமல் பயிற்சி எடுத்துக்கொண்ட பட்டறைகள் அப்படி.

5 வயதில் நடிக்க ஆரம்பித்து 1960ல் கமலின் முதல்படம் களத்தூர் கண்ணம்மா வெளியானது. காலத்தால் அழிக்கமுடியாத காவியங்களை சிவாஜிக்காக இயக்கிய ஏ.பீம்சிங்தான் கமலை முதலை இயக்கியவர்.

 

களத்தூர் கண்ணம்மாவில் உதவி இயக்குநராக இருந்த எஸ்பி முத்துராமன்தான் பின்னாளில் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே  என கமலின் வசூல் மழை படங்களை இயக்கி ரஜினிக்கு பாக்ஸ் ஆபிஸ் போட்டியாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர் என அவரின் குழந்தை நட்சத்திர படப்பட்டியல் டாப் ஸ்டார்களுடன் ஏறுமுகமாவே அமைந்தது ஒரு மாஜிக் என்றே சொல்லலாம்.

பார்த்தால் பசி தீரும் படத்தில் இரட்டை வேடத்தில் சிறுவனாக நடித்து அசத்தினார் கமல்.

சிவாஜி ஜெமினி சரோஜாதேவி சவுகார் ஜானகி ஆகிய நான்கு பேரும் அந்த படத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்தார்களோ அதற்கு நிகராக அமைந்திருந்தது கமலின் இரட்டை நடிப்பு வேடம்.

அன்றைய காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரங்களிடம்  பொதுவாக ஓவர் ஆக்டிங் இருக்கும். ஆனால் கமல் நடிப்பில் அறிவார்ந்த துடுக்குத்தனம் இருந்ததே தவிர ஓவர் ஆக்டிங் இல்லை.

அதனால் அப்போதே மலையாள திரை உலகமும் கமலை அள்ளிக்கொள்ள தவறவில்லை.

1962ல் கண்ணும் கரளும் படத்தில் கமலை இரட்டை வேட குழந்தை நட்சத்திரமாக இயக்கும்போதே கே.எஸ்.சேதுமாதவனுக்கு சிறுவனின் திறமை புலப்பட்டு விட்டது.

அதனால்தான் பின்னாளில் தமிழில் வெற்றிகரமான கதாநாயகன் சீட் கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருந்த கமலை, 1974ல் கன்யாகுமாரி படத்தின் கதாநாயகனாக்கினார்.

மலையாள படவுலகில் நடிப்பின் பரிமாணங்களை அடுத்தடுத்து பெற்றுக்கொள்ள வழிவகுத்தும் தந்தார்.

சிறுவயதில் நட்சத்திரங்களாய் மின்னுபவர்கள் வயது ஏறஏற, தோற்றத்தில் மாற்றம் பெற்று குரல் உடைந்து ரெண்டுங்கெட்டான் நிலையை சந்தித்து தடைபடுவார்கள். 9 வயது கமலுக்கும் அப்படியொரு கட்டம் வந்தது.

இளைஞனான பிறகு ஒப்பனிங்கே கிடைக்காமல் அல்லாடிய கமலுக்கு, முதன் முதலில் தலைகாட்ட உதவியது தேவரின் மாணவன்(1970) படம். விசிலடிச்சான் குஞ்சுகளா என குட்டி பத்மினியுடன் பாடலுக்கு ஆடினார்.

எம்ஜிஆர்- சிவாஜி சகாப்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய வேளையில் பாலச்சந்தர் தந்த அருமையான வாய்ப்புகளை உள்வாங்கிகொண்ட கமலால், பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் சப்பாணியாக வெறும் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு பார்க்கவைக்கமுடிந்தது.

ஆர்.சி. சக்தியும், அனந்துவும் திரைக்கதை அமைப்பதில் சொல்லிக்கொடுத்த பாடங்களை கமல் அலட்சியப்படுத்தாமல் கற்றுக்கொண்டார்.

குரு (1980) படத்தில் திரைக்கதை வசன வித்தையை தொடங்கி தனது 100 வது படத்தை சொந்தமாய் எடுத்த ராஜபார்வையில் காட்டினார்.

1981-ல் அந்தப் படம் தோல்வி என்பதால் அந்த பரீட்சை அப்போதைக்கு தற்காலிக தடைவாங்கிக்கொண்டது.

ஆனால், அடுத்த ஆண்டே, எதைப்பற்றியுமே கவலைப்படாமல் நடித்த பக்கா மசாலாவான சகலகலா வல்லவன், சென்னையில் திரையிட்ட நான்கு பெரிய தியேட்டர்களிலும் 175 நாட்கள் ஒடி வெள்ளிவிழா கொண்டாடியபோது கமலஹாசனுக்கு ரசிகர்களின் போக்கே புரியாமல் மிஞ்சியது குழப்பம்தான்.*

இருந்தபோதிலும் வசூலுக்காக ரஜினிக்கு ஈடுகொடுக்க, தொடர்ந்து கமர்சியல் மசாலா நாயகனாக ஆடிக்கொண்டிருந்த கமலுக்கு முக்கிய பிரேக், இன்னொரு சொந்தப்படமான விக்ரம் என்று சொல்லலாம்.

அறிவு ஜீவி வாசகர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர்  சுஜாதாவுடன் அவர் திரைக்கதை அமைக்க கற்றுக்கொண்ட விதம் அலாதியானது.

நினைத்தாலே இனிக்கும் (1979) படத்தில் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் போதே கமலுக்கும் சுஜாதாவுக்கும் திரைக்கூட்டணி பலமாக அமைந்துவிட்டது.

திரைக்கதை அமைப்பது பற்றி சுஜாதாவிடம் கேட்டு தெரிந்து கொண்ட உத்திகளை  பழைய குருமார்களின் பங்களிப்போடு கலந்து, புதிய ரூட்டில் உருவானது கமலின் நடிப்புக்கு அப்பாற்பட்ட திரைப்பயணம்.

தொடர்ந்து பக்கா கமர்சியல்  படங்களில் நடித்து வந்த கமல் 1987-ல் நாயகன் படம் இந்திய அளவில் பேசப்பட்டபிறகு, ஒவ்வொரு திரையுலக அடியை பார்த்துப்பார்த்தே வைத்தார்.

அதனால்தான் அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் என திரைக்கதை உட்பட பல அம்சங்களுக்காக பேசப்படும் படங்கள் பட்டியல் அடுத்தடுத்து மைல் கற்களை ஏற்படுத்திக்கொண்டே போகின்றன.

கமலின் திரைக்கதை என்பது உண்மையிலே அற்புதமாக இருக்கும்.  சில சமயங்களில் மெய்சிலிர்ப்பை கூட ஏற்படுத்திவிடும்.

அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் இன்ஸ்பெக்டர் பாத்திரம் (சேதுபதி) கமலை கொன்ற பிறகு அவரின் மனைவி ஸ்ரீவித்யாவையும் இரண்டு குழந்தைகளையும் கொல்ல வில்லன் கும்பல் துரத்தும்.

ஸ்ரீவித்யா அடைக்கலம்  கேட்டு மனோரமாவின் குடிசைக்கு போவார். அங்கும் அடியாட்கள் வந்துவிட ஒரு குழந்தையை மனோரமாவும் இன்னொரு குழந்தையை ஸ்ரீவித்யாவும் தூக்கிக்கொண்டு அடுத்தடுத்து தப்பிப்பார்கள்.

அப்போது ஒரு குறிப்பிட்ட குடோனுக்கு  வந்து சேருமாறு ஸ்ரீவித்யாவிடம் மனோரமா சொல்வார்.

இதை தெரிந்துகொள்ளும் அடியாள் ஒருவன் முன்னதாக அங்கே சென்று ஸ்ரீவித்யா வந்தால் வெட்டி சாய்க்க கோடாரியை தோளில் சாய்த்தபடி  பதுங்கி இருப்பான்.

வெளியில் இருந்து பார்க்க அவன் குழந்தையைத் தோளில் வைத்திருப்பது போல் நிழல் வடிவம் தெரியும்.

அந்த நேரத்தில் அங்கே வரும் ஸ்ரீவித்யா, குழந்தையுடன் மனோரமா தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷப்படுவார். வேறொரு இடத்தில் நின்று ஒளிந்தபடி பார்க்கும்  மனோரமா, ஸ்ரீவித்யாதான் கையில் குழந்தையுடன் இருப்பதாக நினைத்து சந்தோஷப்படுவார்.

இரண்டு பெண்களுமே குடோனை நோக்கி நகரும் நிலையில், திடீரென வில்லன் கூட்டம் வந்து பெட்ரோல் ஊற்றியபடியே குடோனை நெருங்கி ஸ்ரீவித்யாவை சாகடிக்க என தீ வைக்கும். குடோன் வெடித்து சிதறும் கோடாரி அடியாள் பலியாகி விடுவான்.

ஸ்ரீவித்யாவும் குழந்தையும் இறந்துவிட்டதாக வில்லன் கும்பல் நினைத்துக் கொண்டு கிளம்பும்.

தூரத்தில் இருந்து பார்க்கும் மனோரமாவோ குழந்தையோடு ஸ்ரீவித்யா பலியாகி விட்டதாக கதறுவார்.  ஸ்ரீவித்யாவோ குழந்தையுடன் மனோரமா தீயில்  இறந்துவிட்டதாக துடிப்பார்..

இந்த மனநிலையோடு இருவரும் குழந்தைகளோடு பிரிவார்கள்.. மனோரமா குழந்தையை மெக்கானிக்காக வளர்ப்பார் ஸ்ரீவித்யா சர்க்கஸ் கம்பெனியில் வளர்ப்பார் என்பது பிந்தைய கதை..

குடோன் வெடித்து சிதறி இறந்தது அடியாள் என்பது மனோரமாவுக்கும் தெரியாது. ஸ்ரீவித்யாவுக்கும் தெரியாது. என்ன மாதிரி விறுவிறுப்பான திரைக்கதை இது!

அதனால்தான் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தை இந்தியாவின் பல திரைப்பட பயிற்சி நிறுவனங்களில் பாடமாக வைத்திருக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரை அபூர்வ சகோதரர்களும் மைக்கேல் மதனகாமராஜனும் செம ரகம். கமல் என்ற மனுஷன் எப்பேர்பட்ட உழைப்பை காட்டி இருப்பார்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்த படங்களில் கமல் படம்தான் அதிகமுறை என்கிற சாதனையும் உண்டு.

இந்தியில் சாகர்(1985) தெலுங்கில் சுவாதி முத்யம் (1986) நாயகன் (1987) தேவர்மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன்(1996) ஹேராம் (2000) என ஏழு முறை அவரின் படங்கள் ஆஸ்கரின் கதவுகளை தட்டியிருக்கின்றன.

கமலின் பயணத்தை சற்றே பின்னோக்கி பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாகவே இருக்கும்.. 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் படத்தில் கமல், இரண்டாம் கதாநாயகன் அந்தஸ்ந்தில் உதயமானபோது, ஜெயலலிதா, வாணிஸ்ரீ, மஞ்சுளா, லதா, போன்றோர் கொடிகட்டிப்பறந்தனர்.

அதற்கப்புறம், சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி என ஒரு தலைமுறை கடந்து, ராதா, அம்பிகா, ரேவதி தலைமுறை.

பின்னர் குஷ்பு, கௌதமி, மீனா, ரம்பா, சிம்ரன், போன்றவர்களின் காலகட்டங்களிலும் கமல் முன்னணி நாயகன்.

இந்த நடிகைகள் நிலை இன்றைக்கு எப்படி என்று நினைக்கும்போது, நேற்றுவந்த அடுத்த தலைமுறை நடிகைகளோடும் கமல் ஜோடி போட்டு அசத்திக்கொண்டிருக்கிறார்.

சுதாகர், பாக்யராஜ், விஜயகாந்த், டி.ராஜேந்தர், மோகன், பிரபு, சத்யராஜ், கார்த்திக், ராமராஜன், என அவ்வப்போது பிளாக் பஸ்டர்களை கொடுத்து ரசிகர்களை ஆட்டிப்படைத்துவந்த திடீர் சூப்பர் பவர் ஹீரோக்களையும் கமலின் திரைப்பயணம் அட்டகாசமாகவே கடந்தது.

விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்றோருடனும் பயணிக்கிறது.

ஜாம்பவான்கள் என எடுத்துக் கொண்டால் ஒவ்வொருவருடனும் கமலின் பயணம் அலாதியானது..

அறுபதுகளின் துவக்கத்தில் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக ஹீரோ ஜெமினிகணேசன் தோளில் அமர்ந்து அறிமுகமான கமலஹாசன், அதே ஜெமினியோடு எழுபதுகளில் நான் அவனில்லை எண்பதுகளில் உன்னால் முடியும் தம்பி 90களில் அவ்வை சண்முகி என அசத்தினார்.

1962-ல் சிவாஜி நடித்த பார்த்தால் பசி தீரும் படத்தில் சிறுவனாய் அசத்திய கமல், அதன் பின்னர் அதே சிவாஜியுடன் 30 ஆண்டுகள் கடந்து  1992 இல் வெளியான தேவர் மகன் வரை நடித்த படங்களில் நினைத்துப்பாருங்கள்.

1977 நாம் பிறந்த மண் என்ற படத்தில் சுதந்திரப் போராட்ட தியாகியான சிவாஜிக்கு முரட்டு மகனாய் வருவார். லஞ்சம் ஊழல் மூலம் முன்னேற வேண்டும் என்று கமல் துடிப்பார் கடைசியில் கமலை தந்தை சிவாஜியே சுட்டுக்கொல்வார்.*

இந்தப் படத்தைத்தான் பின்னாளில் ஷங்கர், இந்தியன் என்ற பெயரில் கமலைத் தந்தை மகனாக நடிக்க வைத்து அப்பட்டமாக ரீமேக் செய்தார்..

இதேபோல மக்கள் திலகம் எம்ஜிஆரு க்கும் கமலுக்கும் இடையிலான உறவும் சுவாரஸ்யங்கள் நிறைந்தவை.

1963 இல் வெளியான ஆனந்த ஜோதி படத்தில் எம்ஜிஆரின் காதலி தேவிகாவின் தம்பியாக கமல் வருவார்.படம் முழுக்க சிறுவன் கமலை வாரி அணைத்து கொஞ்சுவார் எம்ஜிஆர்.

நீ எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆளாக வருவாய் என்று அந்தப் படத்திலேயே கமலை வாழ்த்தி எம்ஜிஆர் பேசுவதுபோல் வசனம் வரும்.

அதே கதாநாயகன் எம்ஜிஆருடன் கமல் பின்னாளில் இணைந்தது, நடிகராக அல்ல உதவி நடன இயக்குனராக.. 1972-ல் வெளியான நான் என் பிறந்தேன், சங்கே முழங்கு ஆகிய இரண்டு படங்களிலும் எம்ஜிஆருக்கு கமல் உதவி நடன இயக்குனர்..

மூன்றாம்பிறை பட விழாவில் முதலமைச்சராய் எம்ஜிஆர் பேசும்போது, அந்த காலத்தில் ஈவிரக்கம் பார்க்காமல் என் இடுப்பை ஒடித்தவன் கமல் என்று சொன்னார்.

நான் ஏன் பிறந்தேன் படத்தில் காஞ்சனாவுடன்,” என்னம்மா சின்ன பொண்ணு ” பாடலுக்காக கமல் அமைத்துக் கொடுத்த கடுமையான ஸ்டெப்ஸ்களை நினைவுபடுத்தியே எம்ஜிஆர் அப்படி சொன்னார்.

எம்ஜிஆர் மட்டுமல்ல சிவாஜி ஜெயலலிதாவையும் உதவி நடன  இயக்குனராக கமல் ஆடவிட்டிருக்கிறார்.*

ஜெயலலிதாவுடனான திரைப்படம் கமலின் திரைப்பட பயணத்தையும் இங்கு  சொல்லியாக வேண்டும். இருவரும் இணைந்து சில படங்களில் பணியாற்றி இருக்கின்றனர் என்பது இன்றைய தலைமுறைக்குத் தெரியாது.

அது 1974 அன்புத்தங்கை படத்தில் ஒரு ஓரங்க நாடகம். ஆணவத்தின் உச்சத்தில் தாண்டவமாடும் அழகுப்பதுமை பாத்திரம் ஜெயலலிதாவுக்கு.

புத்த பிக்குவாக வரும் கமலஹாசனை மயக்கி ஆட்கொள்ள ஜெயலலிதா முயற்சிப்பார். இந்த அழகும் இளமையும் நிலையானது அல்ல என்று புத்திமதி சொல்லி ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டுவார் கமல்.

சவாலே சமாளி படத்தில் ஆரம்பித்த பயணம் 1977ல் ஜெயலலிதாவின் நன்றிகெட்ட தம்பியாக,’  உன்னை சுற்றும் உலகம்’ படம் வரை தொடர்ந்தது. படத்தில் இருவரும் மோதிக் கொள்ளும் சீன்கள் சூப்பராக இருக்கும்.

குருநாதன் கே பாலச்சந்தருக்கும் கமலுக்கும் இடையிலான பயணத்தைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. அது கரடுமுரடுகள் நிறைந்த நீண்ட நெடிய பயணம்.

அரங்கேற்றம்(1973) படத்தை இந்தியில் ராஜேஷ்கன்னா, மும்தாஜ் ஆகியோரை வைத்து ஆய்னா(1976) என இயக்கி னார் கே.பாலசந்தர்.*

அவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கமல், இந்தியில் நல்ல ரோல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

படத்தில் கௌரவ தோற்றமாக வரும் தர்மேந்திரா-நீட்டுசிங் ஜோடியின் டூயட்டை எடுக்கும் அசிஸ்டெண்ட் டைரக்டராக சில விநாடிகள் மட்டும் கமல் வந்து போவார்.

ஆனால் இதே கமலை வைத்து இதே பாலசந்தர் இந்தியில் படம் எடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் உருவானது. அதுதான் ஏக் துஜேகேலியா (1981). படத்தின் மாபெரும் வெற்றி. பாடல்களின் இனிமை, உலகம் அறிந்த விஷயம்.

ஏக் துஜேகேலியேவின் ஒரிஜினலான கமல்-சரிதா நடித்த மரோசரித்ரா, தெலுங்கு வெர்ஷனிலேயே சென்னை சபையர் தியேட்டரில் 596 நாட்கள் ஓடியது என்றால், ஆந்திராவில் அதன் வெற்றியை கேட்கவேண்டுமா?*

இந்தியில் கமலுக்கு மெகா ஓப்பனிங் கிடைத்ததும், அபூர்வராகங்கள், வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய கமலையே பயன்படுத்தினார் கே.பி.

ஒரு புள்ளிவிவரத்திற்கு எடுத்துக்கொண்டால்கூட 1959ல் கமல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்தபோது தமிழின் முதல் சூப்பஸ்டாரான எம்கே தியாகராஜபாகவதரும் சினிமா களத்தில் இருந்தார் என சொல்லலாம்..

தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடு செல்போனின் ரிங்டோன் ஆக என்தோ சின்னி த ஜீவிதம் என ஒரு தெலுங்கு பாடல் ஒலிக்கும். 1970களின் துவக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகேஸ்வரராவுக்கு இந்த பாடலுக்காக கமல் உதவி நடன இயக்குனராக நடனம் அமைத்து கொடுத்தபோது அஜித் விஜய் போன்ற போன்றோரெல்லாம் பிறந்தே இருக்க மாட்டார்கள்..

அதே கமல்தான் இப்போது சிவகார்த்திகேயன் காலகட்டத்திலும்   தனது அடுத்த படம் எப்படி இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அவரின் திரைப்பட வீச்சு எவ்வளவு வீரியமானது!

இந்திய அளவில் இன்றைக்கும் நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் 64 ஆண்டுகால திரைப்பட வரலாறு கொண்ட ஒரே நபர், உலக நாயகன் கமல் மட்டுமே.

திரையுலகில் புதுப்புது உத்திகளையும் நவீன தொழில் நுட்பங்களையும் கமல் அறிமுகப்படுத்தும்போதெல்லாம் அவர் 20 வருடங்கள் அட்வான்ஸாக இருக்கிறார் என்று பலர் சொல்வார்கள்.

ஆனால் கமலோ, எப்போதுமே ‘நான் 20 வருடங்கள் பின்தங்கியவனாகவே உணருகிறேன்’ என்று சொல்வார், கமல் என்கிற பார்த்தாசாரதி.

ஆம், கமலின் தாயார் ராஜலட்சுமி மறைகிறவரை அவர் வைத்த ஒரிஜினல் பெயரான, பார்த்தசாரதி என்றுதான் கூப்பிடுவார்.

68 வயதான கமல்தான் விக்ரம் என்ற பெயரில் மீண்டும் ஒரு படத்தைக் கொடுத்து பல நூறு கோடிகளை அள்ளி திரை உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

திரையரங்குகளில் 100 நாள் ஓட்டம் என்பதெல்லாம் எந்த காலகட்டத்திலோ மறைந்து போன விஷயம் என்று பலரும் முடிவுகட்டிய நிலையில், விக்ரம் படம்  திரையரங்குகளிலும் 100 நாள் ஓடி சாதனை படைத்துள்ளது.

சில நூறு கோடிகளை அள்ளும் படங்களாக ரஜினி கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும்,  இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஓயவில்லை. இந்தியன் 2 மணிரத்தினத்தின் தக் லைஃப் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே இருக்கிறார்.

சுருக்கமாக சொன்னால் இரண்டு சாதனைகளைச் சொல்லலாம்.

பல மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த ஒரே நடிகர் கமல் மட்டுமே.

கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து கதாநாயகனாகவே ஐம்பதாவது ஆண்டை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரே நடிகரும் அவர்தான்.

இந்திய சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஜாம்பவான்களை தவிர எல்லோரிடமும் இணைந்து பணியாற்றிய, இன்றும் பணியாற்றிக் கொண்டிருக்கிற. கமலை இதுபோன்ற சிறு பதிவுகளால் நம்மால் பெரியதாய் ஒன்றும் சொல்லிவிட முடியாது.

சிறு சிறு குறிப்புகளை மட்டுமே தர முடியும்.

#HBD_69_Kamal